மொட்டை மாடிப்
படிக்கட்டில்
தன்னந்தனியா யவள்,
வீட்டுத் திண்ணையில்
விட்டத்தைப் பார்த்தபடி நான்,
தூது சொல்ல வந்தவன்
வெள்ளைக் கரங்களால்
தொட்டு எழுப்பினான்,
அவள் முகத்தின்
பிரதிபலிப்பை
அவனில் கண்டேன்.
எனை யிழந்த
ஏக்கத்தில்
நீர் நிறைந்த கண்களில்
கண்மசி கரைந்து
திட்டு திட்டாய்,
பசலை நோய்
பிடித்ததால்
முகமும் வெளுத்ததோ?
கார்மேகக் குழல் நடுவே
கவலை மேகங்கள்
தடவிச் செல்லுதோ?
அவள் நிலைமை
எனக்குச் சொன்னாய்,
என் நிலைமை
அப்படியே
எடுத்துச் சொல்வாயோ,
வெண்ணிலவே?
No comments:
Post a Comment