Wednesday 27 November 2013

பாவம் நான்



இரவின் முடிவில்
எனக்கென தொடங்கிய
இருவிரல் கொண்டு
எழுதிய கவிதை
பகலவன் பயணம்
தொடங்குமுன்னே
முடிவுற்றது!
கதிரவன் கண்டு
களிக்குமுன்னே
நான் காண வேண்டுமென.
உறக்கம் கலைத்து எனை
இழுத்துச் சென்றாள்!
பாவமில்லையா நான்?

பொன்னூஞ்சல்



சீலையில் கிடந்து
உறங்கிய நாட்களை
சிந்தித்தேன்,
மனம் தித்தித்தேன்.

உன் மடியும்,
உந்தன் சீலையும்,
உன் மனம்போலே
உல்லாச ஊஞ்சலெனக்கு..!

அன்புடன் மொழியும்
ஆத்ம சங்கீதம்
அம்மா நீ பாடும்
அன்புத் தாலாட்டு!

ஊஞ்சலிலாடி
றங்குமெனக்கு
உடல் மட்டுமா உறுத்தாது?
உள்ளமும்தான்..!

இன்று
உள்ளத்து வலி போக்க
பஞ்சணையில்
எப்படிப் புரண்டாலும்
ஆறுவதில்லை,
எனை யுறக்கம்
ஆளுவதில்லை.

மீண்டுமொருமுறை
உன் சீலைப் பொன்னூஞ்சலில்
படுத்துக் கிடக்கவா?
சில மணித் துளியேனும்
என்னை மறந்து,
உள்ளம் மகிழ்ந்து,
உறங்கிக் களிக்கவா?
மன இறுக்கம் தொலைக்கவா?

Monday 25 November 2013

மின்னல் மழை

என் நினைவு கூரையில்
உன் எண்ண மெழுகெடுத்து
வார்த்தை வண்ணம்
பூசி வைத்தேன்.
அத்தனையும் உன் அன்பை
ஆனந்தமாய் சொல்லி
மின்னல் மழை பெய்யுதடி!