காணும் திசையெங்கும்
கரும்பச்சை புல்வெளி,
மனதை மயக்கும்
மெல்லிய பூங்காற்று,
அதிக வாகனமற்ற
அமைதியான சாலை,
அடுத்து என்னோடு
கதைபேசி மகிழ்ந்து வரும்
என்னவள்...
மனம் லயித்தது
அந்த சூழலிலா?
அவள் சுந்தர வதனத்திலா?
கவிதையாய் உருளும்
கரு விழிகளிலா?
கலகலவென உதிரும்
கனி மொழியினிலா?
சடசடவென உதிர்ந்த
மழையைக் கண்டு
மொழிவதை நிறுத்தினாள்,
முகத்தில் துளிர்த்த
மழைத்துளி கண்டு
நான் மகிழ்ந்தேன்.
கரம் பிடித்து
ஓட யத்தனித்தேன்.
தடுத்து நிறுத்தி,
ஆசையாய் அந்த மழையை
அனுபவித்தாள்.
மூச்சை இழுத்துப் பிடித்து
ஈர மழை வாசனையை
உள்ளுக்குள் வாங்கினாள்.
நானும்
மயங்கிப் போனேன்.
அவள் ரசிக்கும் அழகில்,
இசை லயத்துடன் பெய்த மழை,
இன்முகத்துடன் ரசித்த அவள்,
இனி வேறென்ன வேண்டும்?