புத்தக அடுக்குகளின்
பின்புறம் மறைந்திருந்து
அந்த சோகக் கவிதையை
வாசிக்கத் தொடங்கினேன்.
அங்கங்கே தென்பட்ட
அவல ஓசை
சிந்திய கண்ணீரால்
அழிந்திருந்தன.
உடை விலகிய வார்த்தைகள்
கோர்வையின்றி
விலகியிருந்தன.
அங்கங்கே தழும்புகளும்
அதன் ரத்த வாடையும்
நாசியை நெருடியது.
வெளிச்சத்தில் மங்கலாகவும்
இரவுகளின்
மங்கிய ஒளியில்
பிரகாசமாயுமிருந்தன.
உள்ளுணர்வுகளை உணராமல்
இச்சைக்கு வாசிப்பவருக்கு
அவ்வெழுத்துக்கள் அழகுதான்.
உள்ளூர
தெளிவில்லா நீரோட்டமாய்
கவலைகளும்,
சிதைந்துபோன கற்பனைகளும்
இறைந்து கிடந்தன.
ஏளனமாய் தோன்றுமவ் வெழுத்துக்கள்
எழுத்துப்பிழை கவிதையாய்
தோன்றலாம்.
என்றேனும் ஒருவரால்
உணர்வுகளை வாசித்து
உச்சுக் கொட்ட வைக்கலாம்.
இவையெல்லாம்
எழுதியவளின் வாழ்வை உயர்த்தவோ,
சிதைத்தவரின் வாழ்வை
தண்டிக்கவோ இயலாது.
எனினும்,
எங்கேனும் ஒரு மாற்றத்திற்கு
தொடக்கப்புள்ளியை வைக்கலாம்!