பள்ளிப் பருவம்
பட்டாம்பூச்சிகளாய் நாங்கள்,
விட்டால்
விட்டத்தை
எட்டிப் பிடிப்போம்.
தொடச் சொன்னால்
தொடுவானம்
தூரமில்லை என்போம்.
உள்ளத்தில் உற்சாக மழை,
கள்ளத்தனம் அறவே இல்லை.
படித்தபடி விளையாடி,
விளையாடியபடி படித்தோம்.
ஆடச் சொன்னால் ஆடி,
பாடச் சொன்னால் பாடி,
அத்தனையும்
சொன்னபடி செய்தோம்,
நட்பென்றால் என்னவென்று அறியாமல்
நட்பிற்கு இலக்கணமாய் வாழ்ந்தோம்.
அவசர சண்டையில் அரை நொடி,
ஆனந்த நட்பிலே அடுத்த நொடி,
போட்டியுண்டு,
பொறாமையில்லை,
முயற்சியோடு முந்துவோம்,
முடியாததை
மந்தையாகி முண்டுவோம்.
கனவுக்குள் புகுந்து எதையும்
நனவாக்க இயலுமென எண்ணுவோம்.
நம்பிக்கையின் உச்சத்தில்,
நாட்களெல்லாம் வெளிச்சத்தில்.
ஏன் எங்களை வளரவைத்தாய் இறைவா?
புரியாத வாழ்க்கையைப்
புரிந்ததாய் நினைக்க வைத்து,
இயல்பென்று நினைத்து
இருள் மீது நடந்து,
பொய் பேசி, கயமை சேர்த்து,
எதிலும் நம்பிக்கையின்றி,
எல்லாம் சேர்க்க முயன்று,
எல்லாம் இழந்து...
ஏன் எங்களை வளர வைத்தாய் இறைவா?
No comments:
Post a Comment