இரவு முழுதும் கண்விழித்து
இமைபாரம் விலக்கி நின்று
உயிரான என் மகவின்
உறக்கத்தை காத்து நின்றேன்.
மூக்கடைத்து முகம் வெளுத்து
முந்தானைப் பற்றியபடி
முணுமுணுப்பில் அம்மாவென்று
முழு நேரமும் பிதற்றுகிறாள்.
கண் நிறைந்து கவலையினைக்
கணவனிடம் சொல்லாமல்
முகம் திருப்பி கண்துடைத்து
மனசுக்குள்ளே அழுதபடி நான்.
பகல் பொழுதில் வீட்டிலுள்ள
பெரியோரைக் கவனித்து
ராப்பொழுதில் பூஞ்சிட்டை
தளர்ச்சியிலே தவிர்ப்பேனோ?
வேதனையை சொல்லாமல்
வாய்க்குள்ளே விதைத்தபடி
கண்ணீரால் கனியமுதின்
கடுஞ்சூட்டைத் தணிப்பேனாய்!
No comments:
Post a Comment