கனவொன்றை விதைத்தேன்,
கற்பனையில் பூத்தேன்,
காதலெனும் மலராகி உன்
கார்குழலில் திளைத்தேன்.
பருவ நிலை அறிந்து வெண்
பருத்தியென வளர்ந்தேன்.
ஆடைகளாய் உருமாறி உன்
இடையோரம் வளைந்தேன்.
கருமையினில் கலந்தேன் உன்
கண்ணிமையில் இழைந்தேன்
கயல்விழிக்கு அழகூட்ட
கதை சொல்லி வளைந்தேன்.
இதமான இசையாகி
இதழ் தொட்டு மகிழ்ந்து
வளையோசைத் தருமுந்தன்
துளிர்கரத்தில் உருண்டேன்.
உனக்கெனவே பலவாறாய்
உருமாறும் எனக்கேனோ- உன்
உளம்தொட்டு உறவாட
தடுமாறும் நிலைகொண்டேன்.
No comments:
Post a Comment