Monday 5 August 2013

நான் நானாக

என்னைப் பற்றி உனக்கென்ன தெரியும்?
ஏனிப்படி எனை சித்ரவதை செய்கிறாய்?
ஒரு நாளில் வந்திடுமா காதல்?
ஊர் சொல்லி தந்திடுமா நேசம்?
உணர்வுக்குள் ஒன்றாது
உயிருக்குள் ஒட்டாது
பேர் மட்டும் இணைந்திட்டால்
பாதியாகி விடுவாயா?
பாசத்தில் எனைப் பெற்ற
தந்தையாய் ஆவதில்லை.
உதிரத்தில் எனைக் கொண்ட
தாயாயும் ஆவதில்லை.
ஞாலமறிய மாலம் வைத்தால்
உரியவனென்றாகிடுமா?
தீயறிய கரம் பிடித்தால்
துணைவனென்று ஆகிடுமா?
உளம் தொடாமல்
உடல் தொட்டால்
கணவன்
காமுகனாக மாட்டானா?
எனை வெல்ல நீ
என்னுள்ளம் தொட வேண்டும்.
உனை என்னிடம்
உண்மையாய் தர வேண்டும்.
மனம் புணர்ந்த பின்
எனைக் கொண்டு போ!
உனில் நானென
எனில் நீயென
வழி கொண்டதாய்
வாழ்க்கை அமைப்போம்.
அது வரை என்னை நீ
அனுசரி.
நான் நானாக இருக்க

அனுமதி!

No comments:

Post a Comment