உலகமே சுருண்டு
தொலைக்காட்சிப் பெட்டியிலும்,
சமூக தளங்களிலும்,
புதையுண்ட நேரத்தில்,
உற்சாகமாய் புறப்பட்டேன்.
குடையற்று
பயமற்று,
குளிர் மறந்து,
கவனத்தை
கடுமழையி னழகில் தொலைத்து,
நெடு நேரம் நடந்தேன்.
ஆர்ப்பரிக்கும் பேய் காற்று,
அதனிசைக்கு ஆடும் தென்னங்கீற்று,
தமிழ் கவிதையாய் பொழியும்
நீர் சரங்கள்.
சாலைகளில் சுழித்தோடும்
வெள்ள அருவி,
அவ்வப்போது
திடும்மென
வெடித்துச் சிதறும்
மழை மேகம்.
வளைந்து வாழ இயலாத
வேரிழந்த மரங்கள்,
காற்றொலியின் கானத்தில்
என் மனத்தில் மின்னல்,
இயற்கையின் சீற்றத்தில்
எனக்கு பயமில்லை,
இயற்கையாய் நான்
இருக்கும் வரை.
நிஜமாய் நிழல்,
நிழலாய் நான்.
மீட்டெடுக்க வேணுமென்னை
விரைவில்....!
No comments:
Post a Comment