முகம் மட்டும்
தொலைந்ததென்று
நினைத்திருந்தேன்,
முகமூடி இட்டுக்
கொள்ளலாமெனக்
காத்திருந்தேன்.
இல்லை,
முழுவதும்தான்
தொலைந்துவிட்டேன்.
கரு கரு வண்டாய்
காரிருளில் பறந்தேனோ?
பச்சை இலைப் புழுவாக
இலைக் கூட்டில்
ஒளிந்தேனோ?
நீல நிற பறவையாக
நீள்வானத்தில்
மறைந்தேனோ?
கார்மேக மழைத்துளியில்
கலந்தேதான் விழுந்தேனோ?
இங்கெல்லாம் கலந்தால்
மீண்டுவர இயலுமென்னால்,
எச்சம் பட்ட பிழையாக
மிச்சமற்ற நினைவாக
முகமூடி இட்டு
பச்சோந்தியாய் மாறி
மார்தட்டும் மனிதரிடை
நல்ல மனிதனாய்
வாழவேண்டுமென எண்ணத்தில்
மாய்ந்துதான் போனேன் நான்.
தொலைந்த இடம் தெரியாமல்
எழுந்து வர இயலாமல்,
என்னை நான் தேடிக் கொண்டே
இன்னும் இருக்கிறேன்.
No comments:
Post a Comment