நானென்னை அறிய விழைகிறேன்
அதற்காக என்னை கடக்கவும் முயல்கிறேன்
பிரபஞ்சப் பெருவெளியில்
துகளினும் துகளாய்
அளவிடவியலா அணுவாய் நானிருக்க
நான் நானில்லையெனும் நிலை
நானறியும்வரை
நானெனை உணரவியலுமா
ஐம்புலன்களின் வழியை மட்டும்
இறுகப் பற்றிக்கொண்டு
அதனுள் கண்டவற்றிற்கு
அர்த்தம் கண்டுகொண்டு
எல்லைதாண்டிய பெருஞ்சக்தியை
என்னுள்ளும் புறமும்
அறியும் வழியறியாமல்
நானறிந்தவற்றை மட்டும் உலகமென்றும்
எனை காப்பவரை மட்டும்
இறைவனெனக் கருதிக்கொண்டு
அளப்பறிய பெருஞ்சக்தியை
அறியாமலே இருக்கின்றேனே
நானெவ்விதமோ
அங்ஙனமே நீயுமிருக்க
எதற்கிந்த அழுக்காறு
ஏனிந்த கடுங்கோபம்
இருக்கும் சிலகாலமும்
எனதென்றும் உனதென்றும் இல்லாமல்
நமதென்று இருப்போமே
உனையறிய நீயும்
எனையுணர நானும்
முயற்சிப்போமே...!
No comments:
Post a Comment