அவளின் கூவியழைத்த குரலுக்கும் செவிமடுக்காது
ஆழ்ந்திருந்த புதினத்தின்
ஒப்பற்ற நாயகியை
உள்ளத்தில் நாயகனாய் எனையே நினைத்தவாறு
ரசித்துக் கொண்டிருந்தேன்
அடர்ந்த வனம்
நிலவொளிரும் வானம்
சலசலக்கும் நீரோடை
மரமல்லி உதிர்த்த மலர்கள்
அதனிடையே மந்திரப் புன்னகையுடன் அவளென
வர்ணனையில் வசப்பட்டும்
தூரத்தே வரும் சமரனை கொல்ல
இடுப்பிலில்லா வாளை
இருப்பதாயெண்ணியும்
வாசிப்பில் அமிழ்ந்திருந்தேன்
சட்டென்று முன்வைக்கப்பட்ட
காபியின் மணத்திலும் கலையாது
கனவுலகத்தே லயித்திருந்தவனை
சுட்டெரிக்கும் பார்வையினால் பார்த்து
சட்டென்று புத்தகத்தை பிடுங்கி
அப்புறத்தே வைத்தாள்
துணுக்குற்று அவளை நான் நோக்க
தெறிக்கும் சொற்களில்
எனை மறக்கச் செய்யும்படிக்கு
என்ன உண்டு அங்கேயென வினவ
படிக்கும் பல்வேறு கதைகளிலும்
எத்தனை நாயக நாயகியர் வந்தாலும்
என்னவிதமாய எண்ணங்கள் கொண்டாலும்
சுருள் முடியும்
பனி தேகமும்
கனி மொழியும்
ஒளிரும் விழிகளும்
மலர் நாசியும் கொண்ட
செப்புச் சிலையவளையும்
அச்சத்தையறியாத என்னையுமே
கதாபாத்திரங்களில் பொருத்தி
அவளடுத்திருக்கும்போதும்
இல்லாத பொழுதுகளிலும்
களிப்புறுகிறேனென
எப்படிச் சொல்லுவேன்?
No comments:
Post a Comment