புழுதியை
வாரிக்கொண்டு வந்திருந்த அனல்காற்று
புன்னகையை
தருவித்திருந்தது எனக்கு
சில நாட்களாகத்
திறக்கப்படாத
அப்புத்தக
அலமாரியின் மேல்தட்டில்
அடுக்கிவைக்கப்பட்டிருந்த
புத்தகங்கள்
புராதனமோவெனும்
எண்ணத்தை என்னுள் எழுப்ப
படர்ந்திருந்த
பழுப்பு நிற தூசிகளை
எச்சிலில்
கோர்த்து இழையாக்கி
எனது புதிய
வீட்டை நிர்மாணித்தேன்
வாழ்நாளின் பெரும்பகுதி
காத்திருப்பின்
கையிருப்பில்
கரைந்துபோவதே
முறையென்றிருக்க
இரைதேடி நானும்
பொறுமைக்கு
எடுத்துக்காட்டாய்
வீற்றிருக்கத்
தொடங்கினேன்
ஊர்ந்து வந்த
பல்லிகள்
உருவத்தில்
பெரிதாயிருக்க
பறந்துவந்த
கரப்பானோ
நில்லாமல்
கடந்துபோக
எப்படியேனும்
ஏதோவொன்று
விரைந்து வருமென
உள்ளுக்குள்
சொல்லிக்கொண்டிருந்தேன்
அறையின்
தென்மூலையில்
மேசை
நாற்காலியிட்டு
அனுதினமும் எழுதி
குவித்தபடி
வயிற்றுப் பசியோடும்
வாசகருக்கான
பசியோடும்
காத்திருக்கையிலும்
நேர்சிந்தனையை
கைவிடாத
எனது நெஞ்சமர்
நாயகனை போல்......
No comments:
Post a Comment