கருப்பு வெள்ளை இரவுகளால்
எப்படி அவ்வண்ணப் படிவங்களை
வரையமுடிந்ததென
நீண்ட நாட்களாக
எனக்குள் நிலைத்திருந்ததொரு கேள்வி
இரவுகளில் பெரும்பாலானவை நீட்சியற்றும்
நிலைகுலைந்தும் முடிந்திருந்தமையால்
பெரும்பாலான அக்கனவுகளின் பக்கங்கள்
அடிக்கோடிடப்படாத வார்த்தைகளால்
அவசரமாக நிரப்பப்பட்டிருந்தன
குற்றுயிராய் கிடந்த அவ்விரவுகளின்
வலியோசையில் விளைந்த
விழியோர நீர்த்துளிகளினால்
முக்கியமற்றவையெனும் கருத்தில்
கரைக்கவும் பட்டிருந்தன
இயலாமையிலும் கையறு நிலையிலும்
கசிந்த கண்ணீர்த்திவலைகளை
சுமந்திருந்த சிற்சில பகல்களின்
தொடக்க விளிம்பில் இழைந்தடங்கிய
ஒரு சில இரவுகளில்
பிறந்த கனவுகள் மட்டும்
வண்ணமயமாக இருந்தன
இயலாமையின் வெளிப்பாடாய்
ஏக்கமும் தாக்கமும்
சுமந்திருக்கும் கனவுகளெனில்
தம்மில் அவை வர்ணம் பூசிக்கொண்டதெப்படி
இயலாமை சுமந்த துடிப்புடன்
ஆழ்ந்த வலியையும் பொதிந்த
என்னைப் போன்ற இதயங்களின் கூட்டில்
நம்பிக்கை பூக்கள் மலர்ந்து
வண்ணங்களை நிரப்பியிருக்கலாமோ...!
No comments:
Post a Comment