Saturday 12 September 2015

வரவேற்பு



















கனத்த மழையில்
குதித்துக் களித்திருந்த அவளை
பற்றியிழுத்து
பளாரெனக் கொடுக்கப் போவதாகச்
சொல்லிச் சென்ற அத்தையும்

சொல்பேச்சுக் கேளாதவளை
சுகவீனம் பிடித்துக்கொண்டால்
என்செய்வதென தவித்தோடிய மாமாவும்

என்னைவிட்டு
அவள் மட்டும் ஆடுகிறாளேயென
அரற்றியபடியோடிய மைத்துனனும்

ஒருசேரக் கட்டிப்பிடித்து
கவலையினை ஒத்திவைத்து
உற்சாகமழையினை
பெருமழையைக் காட்டிலும்
பெரிதென பெய்யவைத்துக் கொண்டிருந்ததை
கண்டவெனக்கு

கல்யாணத்திற்குப் பிறகாவது
கட்டிப்பிடித்தபடி நனையவேண்டுமென
கண்ட கனவுகளில்
அனலும் கனலும் வீசி
புனலற்ற பொழுதுகளே நிலைக்க

இன்றேனும் ஓர் இனிய மழை
பெய்யட்டுமெனும் பிரார்த்தனையோடு
வீடடைந்தவனை
வானத்துக் கருமேகமும்
இடிமின்னலும்
வரவேற்கத் தொடங்கியிருந்தன…!

No comments:

Post a Comment