கனத்த மழையில்
குதித்துக் களித்திருந்த அவளை
பற்றியிழுத்து
பளாரெனக் கொடுக்கப் போவதாகச்
சொல்லிச் சென்ற அத்தையும்
சொல்பேச்சுக் கேளாதவளை
சுகவீனம் பிடித்துக்கொண்டால்
என்செய்வதென தவித்தோடிய மாமாவும்
என்னைவிட்டு
அவள் மட்டும் ஆடுகிறாளேயென
அரற்றியபடியோடிய மைத்துனனும்
ஒருசேரக் கட்டிப்பிடித்து
கவலையினை ஒத்திவைத்து
உற்சாகமழையினை
பெருமழையைக் காட்டிலும்
பெரிதென பெய்யவைத்துக் கொண்டிருந்ததை
கண்டவெனக்கு
கல்யாணத்திற்குப் பிறகாவது
கட்டிப்பிடித்தபடி நனையவேண்டுமென
கண்ட கனவுகளில்
அனலும் கனலும் வீசி
புனலற்ற பொழுதுகளே நிலைக்க
இன்றேனும் ஓர் இனிய மழை
பெய்யட்டுமெனும் பிரார்த்தனையோடு
வீடடைந்தவனை
வானத்துக் கருமேகமும்
இடிமின்னலும்
வரவேற்கத் தொடங்கியிருந்தன…!
No comments:
Post a Comment