கருநிழல் படர்ந்த மணற்பரப்பில்
எனை பதியஞ்செய்கிறேன்
கனிச் சுவையிழந்த மாவிடத்தில்
எனை கொய்யச் சொல்கிறேன்
நெடுஞ்சாலையதன் இருமருங்கில்
அனல் கரையக் கேட்கிறேன்
நிதம் கனத்தவிழி அடர்ந்த இமை
தனில் உன்னை பார்க்கிறேன்
முடிவான ஒரு சொல்லெடுத்து
அதில் முகிலை கோர்க்கிறேன்
மழை கண்ட கனப்பொழுதுகளில்
மனம் விண்டு போகிறேன்
பெருமூச்சின் கனல் பூத்திருக்க
பகலென்றே காய்கிறேன்
படரிரவின் வளர் கருமையினில்
பனிச் சூழ வேர்க்கிறேன்
இதுகாறும் நின் குரலிசையில்
என் கவனம் பூக்கிறேன்
இனி திசையறியா நெடும் பயணங்களில்
எனை கொண்டே போகிறேன்
No comments:
Post a Comment