மார்தட்டிக்கொண்ட மயானத்தின் எல்லையில்
இழைந்திருந்த இருட்டுக்குள்
நடைபயின்ற ஊதல்காற்றும்
சற்று நேர அளவலாவலும்
பின்னர் பெருங்கூச்சலும்
இடையிடையே கூன் நிமிர்த்தும் அமைதியும் கலந்து
என்றோ தொடங்கி இன்று மாலை வரை
எரிந்த சடலங்களில் குடியிருந்த ஆத்துமாக்கள்
தான் மனிதனாய் பிறந்து
மிருகமாய் பிறழ்ந்த
பரிதாபக் கதைகளை கலந்துரையாடி
கூத்தாடும் கிளர்ச்சி மிகு வேளையின்
சுவாசமற்ற பிரேத நொடிகளையும்
அதனுள் மிதக்கும் அனர்த்த கணங்களையும்
அழுத்தம் மிகு சோக ரணங்களையும் அறியாது
பல மனித மிருகங்கள்
இளஞ்சிறாருக்கு
இன்னது கற்பிக்கலாமெனும் வரைமுறையின்றி
போதை வஸ்துக்களை கொடுத்தும்
பாலியல் கொடுமைகளால் சிதைத்தும்
தமக்கொரு விரைவுப் பாதையை
சிருஷ்டித்துக் கொண்டிருந்தன
No comments:
Post a Comment