என் நிறை
குறையறிந்தவள் நீ
என் சுயம் பலம்
புரிந்தவள் நீ
உற்றாரும்
மற்றாரும் முகம் நோக்கி புகழ்ந்தும்
அழுக்காறால்
புறம் நின்று இகழ்ந்தும் கடக்கையில்
உடலும் உயிருமாய்
என்னுள் கலந்து
கர்ணக் கவசமாக
காத்தவள் நீ
பெரும் நிலக்
கண்ணிகளும்
பேரிடர்
மனவழுத்தங்களும் கூடி
தோளேறி துவளச்
செய்யுங்காலையில்
முதுகெலும்பாய்
முட்டுக்கொடுத்து
நேர் நின்று
நோக்கச் செய்தது நீ
மனப்பள்ளத்தாக்குகளில்
மடிந்து வீழ்ந்து
முடங்கி கிடக்கையில்
நீர்
வீழ்ச்சியாய் பாய்ந்து பரவியெடுத்து
பெருங்காற்றாய்
தூக்கி சிகரத்திலிருத்தி
அழகு பார்த்ததும்
நீ
குறும்புடன்
விளையாடி
குதூகல நொடிகளில்
சொல்லும்
சிறுபிழை
பொறுத்தேயெனை
அள்ளி அணைத்து
மகிழ்ந்தவளும் நீ
இன்றேனோ
நம்பிக்கையின்மையாலெனை
நொறுக்குகிறாய்
சந்தேகம்
கொண்டெனை சிதைக்கிறாய்
அன்பை
மறைத்துவைத்து அயர்த்துகிறாய்
அன்பே
அத்தனையும்
கடந்து போகட்டும்
எத்தனையோ
பொய்யும் பொல்லாப்பும்
எனை துரத்தி
வதைக்கட்டும்
எனதன்பு மெய்யென
நீ உணர்ந்தால் போதும்
இப்பிறவி
மட்டுமல்ல
இனிவரும்
எப்பிறவியிலும்
உன் நினைவில்
மட்டுமே உயிர்த்திருப்பேன்
உணர்ந்திடு….!
No comments:
Post a Comment