காரணம் என்னவெனப் புரிபடாமல்
மனம் கனத்திருந்த
ஒரு அந்திமாலை
அன்றைய நிகழ்வுகளில் ஏதோவொன்று
உள்ளத்தில் நெருடலாய்
இனம் புரியாத சோகம்
எடுத்தியம்ப இயலாத ஆதங்கம்
வார்த்தைகளில் வடிக்கவியலா ஏக்கம்
எதனாலென்று உணரப்படா கோபம்
இத்தனையுமெனை சூழ்ந்திருக்க
என்னவள் ஆசையாய் தந்த
நுரை ததும்பும் தேநீரைப் பருகியபடி
ஈர்ப்பில்லா தொலைகாட்சியில்
விழிகளைப் பதித்து
தெரிந்த ஒரு காட்சியின் மூலம்
சட்டென்று மனப்போராட்டத்தின்
காரணம் உணர்ந்தேன்
இன்று காலை
என்னவள் தனது அண்ணனைப் பற்றி
என்னைவிட அதிகமாய் சிலாகித்திருந்தது நினைவிலாடியது
எனதன்பு தூய்மையில்லையோ
அழுக்காறில் அமிழ்வது முறையில்லையோவென
அறிந்தும் பிறழ்ந்த மனதால்
பலவித சஞ்சலங்கள்
புகுந்தெனை ஆட்கொள்ள
எப்படியோ எனையுணர்ந்த அவள்
பின்புறமிருந்து தோளணைத்து
கன்னத்தில் கன்னமிழைத்து
செவிக்குள்ளே
மனம் மயங்க மந்திரம் சொன்னாள்
ஐ லவ் யூ
பற்றியிழுத்து மடிகிடத்தி
முத்தமழை பொழிந்தபடி நான்
அதீத காதல் விளைவித்த
அதீத கோபமும்
எல்லையற்ற ஏக்கமும்
குறைவற்ற காமமும்
பங்கிடமுடியா பாசமும்
அவசியமில்லையெனத் தெரிந்தும்
அகத்தில் கொழுந்துவிட்டெறியும் அழுக்காறும்
குறையப் போவதில்லை
நானும் குறைக்க விரும்பவில்லையென
விடையாய் அவள்
விழி பனிக்க
குறைப்பதை தானும் விரும்பவில்லையென
மெத்தப் பதித்த
முத்தமொழி மூலம்
சொல்லாமல் சொன்னாள்...
No comments:
Post a Comment