Sunday 13 September 2015

முத்தமொழி















காரணம் என்னவெனப் புரிபடாமல்
மனம் கனத்திருந்த
ஒரு அந்திமாலை

அன்றைய நிகழ்வுகளில் ஏதோவொன்று
உள்ளத்தில் நெருடலாய்

இனம் புரியாத சோகம்
எடுத்தியம்ப இயலாத ஆதங்கம்
வார்த்தைகளில் வடிக்கவியலா ஏக்கம்
எதனாலென்று உணரப்படா கோபம்

இத்தனையுமெனை சூழ்ந்திருக்க
என்னவள் ஆசையாய் தந்த
நுரை ததும்பும் தேநீரைப் பருகியபடி
ஈர்ப்பில்லா தொலைகாட்சியில்
விழிகளைப் பதித்து
தெரிந்த ஒரு காட்சியின் மூலம்
சட்டென்று மனப்போராட்டத்தின்
காரணம் உணர்ந்தேன்

இன்று காலை
என்னவள் தனது அண்ணனைப் பற்றி
என்னைவிட அதிகமாய் சிலாகித்திருந்தது நினைவிலாடியது
எனதன்பு தூய்மையில்லையோ
அழுக்காறில் அமிழ்வது முறையில்லையோவென
அறிந்தும் பிறழ்ந்த மனதால்
பலவித சஞ்சலங்கள்
புகுந்தெனை ஆட்கொள்ள

எப்படியோ எனையுணர்ந்த அவள்
பின்புறமிருந்து தோளணைத்து
கன்னத்தில் கன்னமிழைத்து
செவிக்குள்ளே
மனம் மயங்க மந்திரம் சொன்னாள்
ஐ லவ் யூ

பற்றியிழுத்து மடிகிடத்தி
முத்தமழை பொழிந்தபடி நான்
அதீத காதல் விளைவித்த
அதீத கோபமும்
எல்லையற்ற ஏக்கமும்
குறைவற்ற காமமும்
பங்கிடமுடியா பாசமும்
அவசியமில்லையெனத் தெரிந்தும்
அகத்தில் கொழுந்துவிட்டெறியும் அழுக்காறும்

குறையப் போவதில்லை
நானும் குறைக்க விரும்பவில்லையென

விடையாய்  அவள்
விழி பனிக்க
குறைப்பதை தானும் விரும்பவில்லையென
மெத்தப் பதித்த
முத்தமொழி மூலம்
சொல்லாமல் சொன்னாள்...

No comments:

Post a Comment