ஊரடங்கு உத்தரவு
அமல் படுத்திய வீடு,
மின்விசிறியின்
ரும்ம் அல்லாது
வேறொன்றுமல்லாமல்,
அமைதிப் போர்
நடந்தவாறு,
எனக்கு சிரிப்பைத் தவிர
வேறொன்றும்
முகத்திலில்லை.
அவளுக்கோ
என் சிரிப்பே
நெருப்பிலூற்றிய
நெய்யாக,
சின்னத்திரையில்
வண்ண உடையில்
பெண்ணொருத்தியை
அழகென்று சொன்னேன்.
அவ்வளவு தான்.
முன்பெல்லாம்
எனை விட அழகாய்
பெண்ணொன்றை கண்டால்
பாருங்களென்றே
கான்பிப்பேனென்று
இறுமாப்புடன் சொன்னவள்
இன்றோ?
என்ன ஆயிற்று?
ஏனிந்த கோபம்?
உனை சீண்டிப் பார்க்கையில்
எனக்குமேன் ஆனந்தம்?
கோபத்தில் கண்ணை
உருட்டுவதும்,
ரோஜாவின் மேல் பனித்துளியாய்
மூக்கின் நுனியில் வியர்வை துளிர்ப்பதும்,
பேசும்போது
அபி நயம் வாசிக்கும்
விரல்களும்,
உன் அழகுக்கே
அழகு சேர்ப்பதை
நீ அறியாயடி!
ஒரு நடிகையை
அழகென்றேன்,
உனைவிட என்றேனா?
அரிதாரம் பூசிய
அழகைவிட
அகத்தின்
அன்பில் ஜொலிக்கும்
நீயன்றோ அழகு.
திரையில் மின்னும்
பிம்பங்களை விட
என்னுள்
எப்போதும் ஒளிரும்
நீயன்றோ அழகு.
கன்னம் தன்னில்
வண்ணம் பூசி
கவிதைக்கு
வாயசைக்கும்
பெண்டிரை விட
என்னை கண்டு
கன்னம் சிவக்கும்
உன்னிலன்றோ
பேரழகு
உதிக்கிறது!
உன்னை வர்ணிக்க
என் ஆயுளும்
போதாதடி,
என்னுள் வாழ்கின்ற
இதயம் வேறேதடி?
என்னுயிரே,
உன் கோபச் சுமை களைந்து
வா!
No comments:
Post a Comment