வலிகளையும் வரவேற்கப் பழகிக்கொண்டேன்
விழி துடைக்க உன் விரல் வரமானதால்
அனல் பூச்சை அப்படியே
ஏற்றுக்கொண்டேன்
என் அகமெங்கும்
உன் அன்பருவி பெருகியதால்
ரணங்களையும் ருசித்து ரசிக்கக் கற்றுக் கொண்டேன்
ரசிகை நீயென் வசமானதால்
ஊடுகுளிர் எலும்புருக்க
சிலிர்த்து நின்றேன்
நின் தணல் மேகத் தழுவலினால்
தகித்திருக்கும் நாடிநரம்பெல்லாம்
குளிருடுத்தக் கண்டேன்
உன் மோகமழை என்னில் பொழிந்ததினால்
நெடுந்தோல்வி
வடமிறுக உதறிக் கொண்டேன்
மென் தளிர் விரலென்னை
ஸ்பரிசித்து உயிர்ப்பித்ததனால்
தொடரிடர்
நிகழ் கனக்க
பேரிடர் பாதம் இடர
வாகாயுன் தோள் தொட்டணைத்து நின்றேன்
என் வழியெங்கும்
உன் விழிஜால மொழி சொன்னதினால்...
No comments:
Post a Comment