Wednesday 23 October 2013

பொன்னுலகம்

பார்வையின் ஒளி மின்னல் கொண்டு
பகலவனை பதுங்க வைத்தாய்,
பாதவிரல் பஞ்செனக் கண்டு
பனிமலரும் வெட்கிடச் செய்தாய்,
கார்குழல் கருமையை பெற்று
கற்பனையை மழையென பெய்தாய்,
கண்ணெழில் காதலில் மின்ன
விண்ணொளியும் பதுங்க செய்தாய்.

வெட்கத்தின் துளி சிவப்பெடுத்து
சிந்தூரமாய் பூசிக் கொண்டாய்
வெண்ணிற சங்கென மினுத்த
பொன்னுடலால் கணை தொடுத்தாய்.
என்னுயிரில் உன் பெயரெழுதி
ஏழ்பிறப்பும் எனுள் நிலை கொண்டாய்.
ஏந்திழையே நீ வந்ததனால்
இம்மண்ணுலகம் என் பொன்னுலகம்!


No comments:

Post a Comment