மிதக்கும் சூரியனின்
மிகுந்த ஒளிமழையில்
நனைந்த படியே நான்
நின்றிருந்தேன்.
விளைந்த செடி முனையில்
மலர்ந்த பூவெனவே
சுகந்த மணம் பரப்பி
நீயிருந்தாய்.
இருளின் மொழியெடுத்து
இரவின் விழியிருத்தி
உறவின் ஒளி விளக்கை
ஏற்றி வைத்தாய்.
கனவுச் சோலையிலே
கவிதை பூமலர
காதல் மணப்பந்தல்
பூட்டி வைத்தாய்.
இனிமை வாழ்வுயென
இதயம் மகிழ்ந்திருக்க
உயிரின் வாச நிலை
மாற்றி வைத்தாய்.
வளர்ந்த நல்விதையின்
வாசம் கண்ட மனம்
மாறிப்போக வழி
தேடிக் கண்டாய்.
இதயம் தைத்த இரு
விழியின் அம்பெடுத்து
ஒளியை கொய்து ஏன்
விலக்கி விட்டாய்?
இரவின் நூலெடுத்து
இருளின் போர்வையென
எனது இருவிழியை
மூடி வைத்தாய்.
மூடி வைத்தாய்.
மீண்டும் ஒளி நிலவால்
மேக உடை விலக்கி
இருளை தகர்த்தென்று
போக்கிடுவாய்?
No comments:
Post a Comment