நிலவின் ஒளியில் அழகி நீயென்
மனமினிக்கும் சோலை,
இரவின் மடியில் நீயும், நானும்
இணைந்திருந்த வேளை.
இதயம் முழுதும் இனிமை பொழிய
இசை அமைக்கும் ராதை,
உதயம் வரையில் உரிமை பழக
உயிர் உருகும் ஓசை!
நுதலில் நெளியும் குழலின் வடிவம்
எனை மயக்கும் போதை.
புருவ வளைவில் விரியும் இமைகள்
படபடக்க ஆசை.
விழியின் வழியே கனவில் தொலைவில்
சிறகடிக்க ஆசை.
சுகமாய் மலரும் தென்றல் உனது
மூச்சிழுக்கும் ஓசை.
இதழின் கதவு மெதுவாய் விலக
முத்துதிர்க்கும் ஒளியே,
இரு துண் டெனவே சுளையின் சுவையோ
பருகுதற்கு இனிதே!
இசையும் இனிமை இரவின் கனவும்
தரும் சுகங்கள் பெரிதே!
உருகித் தழுவ உடலும் இணைய
ஒன்றிணைந்த உயிரே!
No comments:
Post a Comment