Friday 6 December 2013

அவசர செய்தி

பறந்து விரிந்த மாக்கடல்,
பார்க்கவனின் வில்லென
வளைந்த கடற்கரை,
வெள்ளைக் கம்பளம்
விரித்தாற்ப்போல்
மணற்பரப்பு,
பொங்கிவந்த
பேரலைகள்
ஒவ்வொன்றும் என்னிடத்தில்
சொல்லவந்த சங்கதிதான்
எத்தனையோ?

என் மனம்
பரவிக் கிடந்த
கிளிஞ்சலாய்
சிதறிக் கிடந்தது.
கூட்டி எடுக்க
மனமின்றி,
மணலுள் சென்ற
வண்டைப் பார்த்தபடி
உறைந்து இருந்தேன்.

கடலுள் சென்று
அலையுடன் கலந்து
அவசர செய்திகளைக்
கேட்டுவரப்
போகலாம் வாவென
ஆறுதலாய்
தோள் தொட்டாள்.

துணையுடன் சென்றால்
தகவல்கள்
இனிப்பாகுமென்று
எனக்குத் தெரியாதா என்ன?

No comments:

Post a Comment