Friday 24 May 2013

மழலையெனக் கொள்வாயா?

சிவந்த பல மலர் நடுவே
வெள்ளை ரோஜா நட்டார் போல்,
தேவலோக பெண்ணொருத்தி
மழலைகளி னிடை தோன்றி
களித்திருக்க வந்தாற்போல்,
என் இனிய தேவதை தம்
வீட்டிலுள்ள குழந்தைகளின்
விளையாட்டில் தான் கலந்து
உற்சாகம் கொண்டிருந்தாள்.
வெற்றிக் களிப்பினிலே
ஒரு குழந்தையவள் கன்னம் கடித்தது.
மறு குழந்தையவள் காலைப் பிடித்தது.
ஒரு குழந்தையவள் இடையை அணைத்தது.
தூரத்தில் நின்று நான் பார்த்திருக்க
புன்னகையை வீசிவிட்டு போய் விட்டாள்.
மாலையிலே மாடியிலே
தனித்திருந்த போது கேட்டேன்,
காலையிலே குழந்தையாய்
மாறிவிடக் கூடாதோ
என்ற எண்ணம் எனக்கு என்று,
மழலையாய் வந்திருந்தால்
நம் குழந்தையை நான்
எப்படி கொஞ்சுவேனென்று
இப்போதே அறிந்திருப்பாய்.

No comments:

Post a Comment