Friday 24 May 2013

உண்மையின் மணம்

உள்ளத்து வலிகளை
உதடுகள் பேசுமோ?
உதடுகள் பேசிடும்
மொழியது மாறுமோ?
உறுத்திடும் நினைவதன்
உண்மைகள் அறிவரோ?
கசந்திடும் உண்மைகள்
மொழிந்திட நாறுமோ?
நாறினும் நறுமணம்
ஆயினும் என் செய?
காரிருள் விலகிட
சாக்கடை புலருமோ?
வீதியில் வெளிச்சத்தை
வீசிட உணருவோம்
ஒவ்வொரு வீட்டினும்
சாக்கடை அடித்தளம்.
வெளிப்புற பூச்சினில்
அத்தரை சேர்த்திட
அடித்தள நாற்றங்கள்
அடியுடன் மறையுமோ?
உள்வரை கதிரவன்
ஒளிதனில் காய்ந்திட
நன்மனம் மலருமே!
நறுமணம் கமழுமே!
இறைவனின் திருவொளி
என்னுள் பரவிட
என் மனம் நறுமணம்
வீசிடும் மலர்வனக்
காடாய் மாறிட 
வேண்டினேன் உனையே,
என் திரு குருவே!

No comments:

Post a Comment