Sunday 5 January 2014

இருபாலர் நட்பு

















இருபாலர் நட்பு

சுற்றுவெளியில்
சூழ்ந்திருந்த கருவர்ணங்கள்,
குமிழியிட்டு குழுமியிருந்தன.
கோபக் கொப்பளிப்புகள் ஏராளம்,
எக்காளத்திற்குக் குறைவில்லை.
பொறாமைத்தீயால்
அச்சுறுத்த முயற்சித்தன.

வெண்பஞ்சு மேகத்தூவலில்
வெண்புறாக்களாய் நாம்,
மெல்லிசையை இதழ்சூட,
முறுவலித்து முகம் மலர,
கரம்கோர்த்து,
விகல்பமின்றி,
பேதமையற்று,
மென் நடை நடந்த
பொன்மாலையில்,

தீக்கண்ணால் நமைக் கண்ட
கருவர்ணங்கள்
கொட்டித் தீர்ந்தன.
நமை குளிப்பாட்டி எக்களித்தன.
வெண்புறாக்கள்
கருமை கொள்ளட்டுமென
கைகொட்டின.

அகத்தூய்மையை
திரையிட முடியுமா?
வெளிர் அன்பில்
கருவர்ணங்கள்
அதீத அழகு பெற்று
மிளிர்ந்தன.

அழகுற
வண்ணபுறாக்களாய்
நட்பின் பெருமையை பறைசாற்றி,
வானில் பறந்தோம் நாம்,.
மேலே, மேலே…!

No comments:

Post a Comment