Monday 20 January 2014

மூன்றே வார்த்தைகள்

மூன்றே வார்த்தைகளிலவள்
முழங்கிய கவிதையென்
மென்பொழுதுக்குள் நுழைந்து
முடிவின்றி நீண்டிருந்தது.

உலர்ந்த கனவிற்குள்
சிறுதூரலாய் தொடங்கி
அடை மழையாய் கனத்திருந்தது.

வாசிப்பினூடே
மயிற்பீலி தீண்டல்களால்
இடைவெளிசுவாசத்தை
கூட்டியிருந்தது.

வாசல்கடந்தென் வீதிகளில்
வெளிச்சப்புள்ளிகளை வாரியிறைத்து
நிழல்தாமரைகளில்
ஒளிமழை பெய்வித்திருந்தது.

மிதந்த தென்றல் வாசமாய்
மூச்சுக்குழல்களில் நுழைந்து
உயிரணுக்களில்
உற்சாகபூங்காற்றை
வீசியிருந்தது.

மறைந்திருந்த
மாலை பொழுதொன்றில்
மீண்ட அவள்
சிதறிய வார்த்தைகளை நான்
எழுத்துக் கூட்டி
வாசிக்கும்வரை…!

No comments:

Post a Comment