மூச்சுக்காற்றுக்குள் நீ சொன்ன
முன்னூறு கதைகளும் முண்டியடிக்க,
வாழ்க்கைப் பயணத்தின்
ஒவ்வொரு திருப்பத்திலும்
உன்கரம் பற்றியே நடப்பதாய்
உணர்வுகள் பொங்குதடா!
எத்தனைத் துயரங்கள்,
எத்தனை வசவுகள்?
என்றினும் நீ மனம்
கலங்குதல் கண்டேனா?
கோடி உயிர்களும்
குமுறும் எரிமலையும்
கொண்ட ஆழ்கடல்
அமைதியின் உருவமாய்,
வானத்திற்கிணையாய்
விரிந்து கிடப்பதாய்
எந்தன் மனமெங்கும்
வியாபித்திருக்கிறாய்!
முயற்சிகள் தோற்குமோ,
முரண்களே சுவைக்குமோ?
தினமொரு உளியெனை
சிதைக்கலாகுமோ?
வரமென நீ குரு
வருவதாய் உணர்கிறேன்,
கரம்பிடித்தேயெனை
கரைத் தொட முயல்கிறேன்.!
No comments:
Post a Comment