சினம் கொள்,
ரௌத்ரம் பழகு,
ஆவேசமாயிரு,
அடி வயிற்று ஜ்வாலையை
அப்படியே வைத்திரு!
அவளின் கதறலை
நீ உறுமலாக்கு,
உயிர் போனால்
மயிர் போச்சு,
மானத்தை கெடுத்தவனை
வெறும் மரணம் கொள்ள
வைக்காதே!
கொலையுண்டதில் வேதனை,
எனினும் ரணமில்லை.
கொடூரமாய்
கசக்கப்பட்ட பூ,
கொதிக்குதல்லவா உள்ளம்?
எங்கு சென்றாலும்,
என்ன செயல் செய்தாலும்,
அவள் முகமே
கடப்பாறைகளாய்
உள் நெஞ்சில்
அடி ஆழம் வரை
ஆழ்ந்து, பதிந்து
நிற்கிறது!
பார்த்திருக்கவா?
காத்திருக்கவா?
கயவர்களிலும்
சேர்த்தியில்லாத
கொடூர மனம் படைத்த
கொலைகாரர்களை,
குழந்தைகளையும்,
வஞ்சிகளையும்,
என்றென்றும் பூஜிக்கும்
எம் குல
கொழுந்துகளையும்,
ஈவிரக்கமின்றி,
கொன்று குவித்தோரை
என் மனத்தை
பிய்த்தெறிந்து விட்டு,
இனியும்
பார்த்திருக்கவா?
காத்திருக்கவா?
No comments:
Post a Comment