சுட்டெரிக்கும் சூரியன்,
கடும் வெயில்,
வெகுதூரம் நடந்து,
களைத்து,
தணல் தேடும் நேரம்,
அங்கே ஓரு மர நிழலில்,
கைகாட்டி
அருகில் வாவென அழைத்த
ஒரு தேவதை,
ஆவலுடன்
அவளை நோக்கி
அடியெடுத்து வைத்தால்,
கடும் சூடு,
கல்லும் முள்ளும் கூடுதலாய்,
கண்கள் அவள்மேல்
லயித்துப் போனதால்
பதறும் நகங்களையும்,
சிதறும் துளிகளையும்
கவனியாது
உள்ளத்தை ஒருங்கிணைத்து
அவளை நோக்கி
நடந்தேன்.
எட்டியவுடன்
என்னைப் பற்றித்
தன் மடியில் வாங்கி
தலை வருடி,
தேகம் இளைப்பாற,
சிந்தை களைப்பாற,
என்னிலை மறக்க வைத்தாள்.
நேரங்கள் கடந்தன,
நிலாப்போதும் கழிந்தது.
இளைப்பாறல் மீறி
எழுந்தாடும் வேளை,
என்னை விட்டு
அவள் பாதையில்
பறந்து சென்றாள்.
மீண்டும் தனிமையில்,
பாதை இருளில்,
முள்ளும் கல்லுமாய்,
நான்......!
No comments:
Post a Comment