நீள்வானப் பாதையின்
நெடுந்தொலைவுப் பயணத்தில்
நீந்திய. மேகத்தின்
நிழலை தொடர்ந்த பறவை
இடைவெளியின்றி
இணைந்து பறக்கும் ஆவலுடன்
மேலே மேலே எழும்பியது.
வாழ்வு தந்த வள்ளலை
விட்டு விலகி
கனவுடன் காதல் கொண்டு
காற்றினை கிழித்து மேலும் பறந்தது.
விரைந்த வேகத்தில்
சிதைந்த காற்று
உந்தியதால்
உருக்குலைந்த மேகம்
துளிகளாய் மாறி
தாயுடன் கலந்து மறைந்தது.
தன்மேல் விழுந்த
துளிகளின் சிலிர்ப்பில்
தன்னை மறந்த பறவை
மேலும் மேகத்தைத் தேடியபடி
மேலே மேலே பறந்துகொண்டே இருந்தது...!
No comments:
Post a Comment