Sunday 20 July 2014

காத்திருப்பு













பழுத்து பச்சையமிழந்து தரையைத் தொட்ட
அவ்விலைக்கு
உயிர்வாழ்தலில் கூடுதல் ஆசையிருந்தது.

நேற்று வரை உயிர்கொடுத்த ஆதவன்
இன்று உச்ச கோபக்கதிரால்
உதிர்த்துவிட்டான்.

அதிகாலை பனித்துளிகள்
அழகிய தமிழ்க்கவியாய்
ஆவலுடன் தழுவியதும்,
அணிலும் பறவைகளும்
தடவித் தாவிச் சென்றதுவுமான
ஆனந்த காலங்கள் இனியில்லை.

மையலுடன் மழைபொழிந்து
குளிர்வித்த காலங்கள் மீண்டும் வரினும்
உயிர்த்தெழுதல் சாத்தியமில்லை.

ஒளியுமிழ்ந்து உயிர்கொடுத்த
கதிரவனின் காதல் கனலாகி தகிக்க
உயிரிழந்த இலையை யுதிர்த்து
இனியொரு இலையை பிரசவிக்க
காத்திருக்கிறது மரம்

கொடுங்காற்றோ கடும் மழையோ
கொண்டு போகும்வரை

காத்திருப்பும் இனி கவனிப்பாரின்றி…!

No comments:

Post a Comment