Thursday 17 July 2014

புகைசூழ்ந்த மேகப்படலத்தினூடே

















இரவின் தொடக்கத்தை அறிவிக்கும்
மௌன உரசல் மிகுந்து
ஏகாந்த வெளியெங்கும்
ஒளி நீங்கி இருள் கவ்வ

சடசடத்துக் களைத்த பறவைகள்
தன் கூட்டில் அமைதி தேட
சுழன்றடித்த காற்றும்கூட
சற்று நேரம் அமைதியென பறையறிவிக்க

வெண்ணிற மேகங்கள்
தன்மேல் கருமையை பூசிக்கொண்டிருக்க
உறக்கச்சுமை மிகுந்தும்
உயர எழும்பிய கண்ணிமைகள்
மங்கிய தூர வெளிச்சத்தின்மேல் மையலின்றி

எதிர்வரும் கனவுலகத்திலும்
புக நிராசை கொண்டு
புகைசூழ்ந்த மேகப்படலத்தினூடே புகுந்தது

கருஞ்சேலையணிந்த
மேகப்பஞ்சுகளின் சிலிர்ப்பை உள்வாங்கி
வெம்மையுண்ட விழிகளின் தாபத்தை
தற்காலிகமாகவேனும் தணிக்க முயன்று

அகச்சூட்டில் பொங்கித் துளிர்த்த
ஓரிரு துளிகளில் கூடிய ஆளுமையால் தோற்று
அகம் வென்றதாக அறிவித்தபின்
தொடங்கிய அருவியின் துளிகளில்
பூமி நனைந்து குளிரத் தொடங்கியது

No comments:

Post a Comment