எனக்குத் தீந்தமிழ் பிடிக்கும்
தேமதுர இசை பிடிக்கும்
நல்லோவியம் பிடிக்கும்
நளினங்கொண்ட நடை பிடிக்கும
நற்கதை பிடிக்கும்
நடிப்புலகம் பெருமைகொள்ளும்
யாவரும் பிடிக்கும்
கொட்டும் மழையில்
குடையின்றி நடத்தல் பிடிக்கும்
என் கோப முடிச்சுகளை
நீ இதழ் கொண்டு அவிழ்ப்பது
பிடிக்கும்
கற்பனையுலகில் உனது தடங்கண்டு
களிநடனமாடப் பிடிக்கும்
விழிமுனையில் எட்டி நிற்கும்
துளி கொணருமுன்
கார சமையல் பிடிக்கும்
என்றும் எளிதாய் ஜீரணமாகும்
என் இட்டலியே உனை மிகவும்
பிடிக்கும்
அடர்குளிரின் நடுவே
அகமுசுப்பும் சுவை கொண்ட
தேநீர் பிடிக்கும்
தெளிந்த நீரோடை
வளைந்து செல்லும் மலைச் சாலை
எங்கும் பசுமையுடன்
எனை கொஞ்சும் காற்று
கார்மேக வானம்
கவி சூல் கொள்ளும் தனிமை
எல்லாம் பிடிக்கும்
அத்தனையும் நான் ரசிக்க
எனை ரசிகனாக்கிய உனை
எனது உயிரெனப் பிடிக்கும்
ஆனால்,
உனக்குப் பிடித்தமானவற்றில்
எனைவிட மேலாயொருவனை நீ சந்திக்க
நேர்கையில்
அந்த நொடியே என் ஆதி முதல்
அந்தம் வரை
பொறாமையெனும் தீ பிடிக்கும்!
No comments:
Post a Comment