அந்த புழுதியடங்கிய மாலை வேளையில்
தோட்டக்கதவை திறந்ததும்
துணுக்குற்றேன்
வாடிய செடிகளும் பூக்களும்
வீட்டில் அவள் இல்லையென
பட்டென்று உணர்த்தின
வாசல் கதவை திறக்க
விருப்பமின்றி நின்றேன்
முகமலர வரவேற்று
முத்தமொன்று ஈந்து
அத்தனை கதைகளையும்
அவசியமே இல்லாமல் கேட்டு
ஆசுவாசப்படுத்துமென் தேவதை
வீட்டினகத்தில் இல்லையென உணரவே
சற்று நேரம் எடுத்தது
ஒருமணிக் கொருமுறை
பேசிக்கொண்டுதானிருக்கிறாளெனினும்
என்னகத்தேதான் அவள் உறைகிறாளெனினும்
அவளில்லா வீட்டினுள்
அடியெடுத்து வைக்கவும்
அஞ்சுதே நெஞ்சம்
ஒற்றை விளக்கும்
ஒரு அறையும் போதுமென்று
முடங்கிக் கிடக்க நினைக்குதே மனம்
வெளிச்சப் பொழுதுகளில்
வேலையில் சிக்குண்டு கடக்கும்
காலம்
மாலையும் இரவுமெனை
வாட்டியெடுக்குதே
என்னை நினைத்து
தவித்தபடிதான் இருப்பாளென்றாலும்
வந்து சேரும்வரையெங்கிலும்
சுற்றத்துடன் மகிழ்ந்து
சுற்றிவரட்டும்
சந்தோஷப் பூங்காவில்
அவளும் ஒரு பூவாய்
மலர்ந்திருக்கட்டும்
அதுவரை அவள் நினைவுக்கு
தோட்ட மலர்களுடன் நான் பேசுகிறேன்
No comments:
Post a Comment