புகைப்படர்ந்த பார்வைக்குள்
புதைந்திருந்த பழங்கால நினைவுகளை
மயங்கிய மாலைப் பொழுதொன்றில்
சுவாசிக்கத் தொடங்கினேன்
சதிராடிய கரும்பு வயல்களும்
மஞ்சள் நிறச் சோளக் காடுகளும்
பசுமையான கம்பஞ்சோலைகளும்
மையமாய் நின்று நிழல் தந்த
புளிய மரங்களும்
கட்டைவண்டித் தடங்களுடனான
செம்மண் புழுதிச் சாலைகளும்
மூதாதையர் காலத்தவையென
முந்திக்கொண்டுச் சென்றுவிட்டிருந்தும்
மாசுபடா அவ்வியற்கை
அள்ளித்தந்த சுகங்கள் ஏராளமெனும்
ஏக்கங்கள் இனியும் ஆழ்நெஞ்சில் பசுமையாய்..
செயற்கை காற்றுக்குள்
சிறைபட்ட என் குட்டி தேவதை
வெளிப்படும்போதே விசும்புகிறாள்
தூய காற்றின்றி தும்முகிறாளென்று
மீண்டும் அக்காலத்திற்கு
எமை இட்டுச் செல்லவேண்டி
எம்மூதாதையரை இறைஞ்சுகிறேன்..
மறைந்தவர்
மறைந்திருந்தேனும் கேட்பாரா..?
மாற்று வழியேதும் சொல்வாரா..?
No comments:
Post a Comment