Sunday 14 September 2014

காத்திருந்த பறவை

























கரு நிறத் திரைக்கப்பால்
காட்சிக்குப் புலப்படா நிகழ்வுகளை
கற்பனையில் கண்டு
கவியெழுத காத்திருந்ததந்த பறவை

மழையைப் பிரசவிக்க
அடர்புகைக்கப்பால் சுழன்றுகொண்டிருந்த
மேகவிழிகளின் ஒளிச்சிதறல்கள்
தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்ததால்
அடர்மழை கொட்டுமென
அறிந்தேயிருந்தது.

உட்புறம் விழுந்த
ஓரிரு துளிகளின் வழி
மறைவுக்கப்பால் நடப்பது
மகிழ்வைத்தரும் நிகழ்வல்லவென
மனம் சொல்லிக்கொண்டது

எழுதத் தொடங்கிய வார்த்தைகளில் படிந்த ஈரத்தில்
எழுதப்படாத எண்ணற்ற கவிதைகளைக் கண்டு
திரைவிலக்கி
தன் சிறகைக் கொடுத்து
வாழ்வியல் கவிதைகளை
வடித்தெடுக்கும்படி கேட்கச் சென்றது

நீர் நிறைந்த அவ்விழிகளுக்கு
சிறகு தேவையில்லையெனச் சொல்லி
தனது கனவுலகம் தேடி
கற்பனைவெளியில்
விரையத் தொடங்கியதது..!

No comments:

Post a Comment