ஈரப்பதம் நிறைந்த பொழுதினில் இருட்டில் விரிந்த பருவங்கள்
புருவம் உயர்த்திப் போதையில் பருகும் காதல் விரசங்கள்
மங்கை மோகக் கூந்தலில் தொடங்கும் காமன் ஊர்வலம்
நுதலை தீண்டும் இதழ்களில் வானின் மின்னல் தோரணம்
விழிகள் கலந்த நொடியினில் வாசல் எங்கும் பரவசம்
கன்னக் கதுப்புக் கோப்பையில் ததும்பிடும் காதல் கனிரசம்
பருகிட பற்கள் பதிகையில் ஏக்கம் தொடங்கி ஊர்ந்திடும்
இதழின் சாறை ஒற்றியெடுக்கையில் மோகக் கவிதை அறிந்திடும்
உலவும் இரண்டு அரவங்கள் உயிரில் பரவி தீச்சுடும்
அங்கும் இங்கும் தேனென அதரம் தேடி பருகிடும்
ஏங்கும் குவளைத் தேன் துளி அமுதெச்சில் படர ஊறிடும்
உருகும் வியர்வைப் பெருகிட செவ்வுதிரம் பற்றி எரிந்திடும்
இருளின் போர்வை கணங்களை இன்பம் துய்த்தே மகிழ்ந்திடும்
ரோமக் காலின் உயிர்ப்பினில் உச்சம் எட்டிப் பிடித்திடும்!
நொடிகள் நிமிடம் கரைந்திட யுகங்கள் தேவை என்றிடும்
என்னை வாங்கி நிமிரும் நீயென என் வெட்கம் நிறைந்தே பூத்திட...
காதல் மலர்ந்த வேளையில் கலப்பினமாகும் நம் கலவித் துயில்!
No comments:
Post a Comment