என் வார்த்தைகளுக்கிணங்க
சிந்தனை விடுத்து
ஒவ்வொன்றாய் சிறகுதிர்க்கிறாய்
வான் நிறைந்த மேகத்துகள்களிடையே
உன் பறத்தல் எளிதாயில்லையென அறிந்தும்
இடை நிறுத்தமில்லா பயணத்தில்
எவ்வாறேனும் தற்காலிக இருப்பிடம் தேடென்று சொல்லி
சிறகுகளை கவர்வதிலேயே கவனமாயிருக்கிறேன்.
அன்பு மொழிக்கு
அத்தனையும் தரத் தயாராயிருக்கும் நீ
தானிழந்தவற்றின் மதிப்பறியாததை போல
எந்தன் அன்பே அளப்பரிதெனெ புன்னகைக்கிறாய்
இறுதி இறகும் உதிர்ந்த பின்னரே உணர்கிறேன்
இனியொருபோதும் ஒட்டாத சிறகாய்
உன்னையே எனக்காக
இழந்துவிட்டிருக்கிறாயென..
No comments:
Post a Comment