மடிசாய்ந்து
இன்சுவை கதை பேசி
இனித்திருந்த பொழுதொன்றில்
மெல்லிய மந்தமாருதத்துடன்
பவழமல்லி வாசமும் இணைந்துவர
அகம் நிரப்பி சுவாசித்த நொடி
அவளின் நேச சுவாசம்
அதனினும் மணமானதென சொன்னேன்
புன்முறுவல் பூத்து
கண்ணிமைகள் படபடக்க
கனிமுத்தமொன்று ஈந்து
ஆவலுடன் கேட்டாள்
தன்னை எவ்வளவு பிடிக்குமென
ஒரு நொடி
என்ன சொல்லவெனத் திகைத்து
மறுமொழி பகர்ந்தேன்
அவளுக்கென்னை பிடிப்பதைவிட
ஒருதுளி அதிகமென
சிலிர்த்த காற்றுதிர்த்த மலர்களுடன்
சிரிப்பையும் அவளுதிர்க்க
வெற்றிகொண்டவனாய்
வினவினேன்
என்னை எவ்வளவு பிடிக்குமென
நிஜப்பிரியை யவள்
நிதானித்துச் சொன்னாள்
நம்முடைய அன்பான
மகளை பிடிக்குமளவென்று
கவிதைகளும் கற்பனைகளும்
மகிழ்ச்சி வெள்ளத்தில்
மூழ்கடிக்கலாம்
உள்ளத்திலுதிக்கும்
உண்மை வார்த்தைகளேயென்றும்
உறுதியாக நிலைத்திருக்குமென
உணர்ந்தபடி
என்னையறியாமலென் விழிக்கசிய
உப்பு நீரை உதடுகொண்டு
ஒற்றியெடுக்கத் தொடங்கினாள்...!
No comments:
Post a Comment