Saturday 10 October 2015

முன்கோபம்

















என்றைக்கு அது இடம்பெயர்ந்து
பிரிதொன்றுக்கு வாய்ப்பளித்ததெனத்
தெரியவில்லை

ஒற்றை நாளில் நிகழ்ந்திருக்க
வாய்ப்பில்லை

எப்போதும் வெளிவரத்
துடித்துக்கொண்டிருந்த அது
எல்லோருக்கும் இம்சையெனவே
உணரப்பட்டிருந்தது

உடல் முழுக்க ஊடுருவி
ரத்த நாளங்களை சூடேற்றி
எளிதில் கசப்பை
வெளித்துப்ப வைத்திருந்ததனால்
இதுதானெனது சுயமென
அனைவரையும்
அதிருப்திக் கொள்ள வைத்திருந்தது

என்று தனதிருப்பிடத்தை விட்டு
சற்று நகர்ந்து
பிரிதொன்றுக்கு வழி கொடுத்ததோ
அன்றே அதனாதிக்கம்
பறிக்கப்பட்டிருந்தது

சிறுகச் சிறுக
ஆக்கிரமிப்பு அதிகமாக
பிறரின் பிடிவாத விருப்பங்களில்
தன்னையும்
தன் சுயத்தையும் பறிகொடுத்து
எங்கும் எதற்கும்
யாருடைய விருப்பத்திற்கும்
செவிசாய்த்து

ஒற்றை முனகலில்
தொண்டைக்குள் நிற்கும்
வேதனை முள்ளை விழுங்கியபடியே
விட்டுக்கொடுப்பினுக்கு மட்டும்
முழுமையான ஆளுமையளித்து

காணாமலே போய்விட்டதந்த
மூக்குநுனி முன்கோபம்

No comments:

Post a Comment