ஆனந்தம் நின்னகமெங்கும்
நிரந்தரமாய்
நிறைந்திருக்கவேண்டுமென
நான் வேண்டியிருக்க
ஒற்றைச் சொல் கேட்டு
உருண்ட விழிநீர் மறைத்து
புறமிருந்து வந்தவனுக்கு
பொய்ப்புன்னகை ஈந்து நின்றாள்
இதய ஓசைகளின்
லயமறிந்தவனுக்கு
அவள் இயல்பிலில்லையெனத்
தெரியாமல் போகுமோ
கரம் பற்றி
இறுகணைத்து
நுதலிலென்னிதழ் பதித்து
என்னவாயிற்று என்றேன்
ஒன்றுமில்லையென
ஒளித்திருக்க முயல
மடியணைத்து
தலைகோதி
மீண்டும் என்னவென
யாசித்தேன்
மறுமொழியில்லையெனினும்
விழி திரண்டு
விடை சொன்னது
குறையற்ற மனிதனிக்
குவலயத்திலில்லை
குற்றம் சொல்லும் நபர்கள் தம்மை
திரும்பிப் பார்ப்பதில்லை
நீயென்னை
நிறைகுறையாய் ஏற்பதுபோல்
நானுன்னை
அப்படியே ஏற்கிறேன்
எத்துணை பேர்
குறை சொல்லித் திரிந்தாலும்
மற்றவரைப் பற்றிக்
கவலையெதற்கு
உன் அகிலமென நானிருக்க
ஆரணங்கே கலங்காதே
அன்பை மட்டுமே பொழிவேன்
ஆருயிரே வா என்றேன்
உடல் சாய்ந்து
உயிரொட்டிக்கொண்டாள்
No comments:
Post a Comment