மற்ற கற்களுடன் பதித்தபோதே
இது மாத்திரம் சிறிது தலை தூக்கியிருந்தது
சுற்றிலுமுள்ள மற்ற கற்கள்
மிதிபடும்போதெல்லாம் அமைதிகாக்க
கவனமின்றி நடப்பவரின் பாதவிரல்களை
பதம் பார்த்துக் கொண்டிருந்தது
பிடிமானத்திற்கு இடப்பட்ட மண்ணும்
வேகமாய் இளகி
மேலும் இக்கல்லின் ஆட்டத்திற்கு
அடிகோலியது
ஓடிவரும் சிறார்களும்
கவனமில்லா நடைவாசிகளும்
சபிக்காத நாளில்லை
ஓருமுறை அடிபட்டவர்
மறுமுறை அவ்விடம் வரும்போது
தன்னை மிதிக்காமல் செல்வதைப் பார்த்து
அகமகிழ்ந்தது அது
அதன் மகிழ்ச்சியெல்லாம்
பெரு மழைகாலமொன்றில்
சுற்றிப்பிடித்த மண் கரைந்தோட
அன்று அவ்வழி நடந்த அவர்
புரட்டி எடுத்து
ஓரத்திலோடிய சாக்கடையில் தள்ளும்வரைதான்
No comments:
Post a Comment