Saturday 4 October 2014

நடைபாதையில் ஒரு கல்



மற்ற கற்களுடன் பதித்தபோதே
இது மாத்திரம் சிறிது தலை தூக்கியிருந்தது
சுற்றிலுமுள்ள மற்ற கற்கள்
மிதிபடும்போதெல்லாம் அமைதிகாக்க
கவனமின்றி நடப்பவரின் பாதவிரல்களை
பதம் பார்த்துக் கொண்டிருந்தது

பிடிமானத்திற்கு இடப்பட்ட மண்ணும்
வேகமாய் இளகி
மேலும் இக்கல்லின் ஆட்டத்திற்கு
அடிகோலியது

ஓடிவரும் சிறார்களும்
கவனமில்லா நடைவாசிகளும்
சபிக்காத நாளில்லை

ஓருமுறை அடிபட்டவர்
மறுமுறை அவ்விடம் வரும்போது
தன்னை மிதிக்காமல் செல்வதைப் பார்த்து
அகமகிழ்ந்தது அது

அதன் மகிழ்ச்சியெல்லாம்
பெரு மழைகாலமொன்றில்
சுற்றிப்பிடித்த மண் கரைந்தோட
அன்று அவ்வழி நடந்த அவர்
புரட்டி எடுத்து
ஓரத்திலோடிய சாக்கடையில் தள்ளும்வரைதான்

No comments:

Post a Comment