ஒவ்வொரு நொடியும்
உள்ளத்தில் வண்ணக்கலவையை வாரியிறைத்து
கண்ணுக்கு குளிர்ச்சியாய்
காட்சிதரும் பசுஞ்சோலை பேரழகி
எண்ணமும் செயலும்
வெளிச்சத்தை வீச மலர்ந்திடும்
வெண்தாமரை பூவழகி
கற்பனைக்கெட்டா
கருணை மழை பொழியும்
மஞ்சள் நிற தெய்வீக வடிவழகி
நிந்திக்க வருவோரை
நெருப்பென சுடும்
செந்தணல் சிவப்பழகி
அனைத்தையும் ஆட்கொள்ளும்
அண்டமாய் திகழும் அன்புநிறை
கருநீல கண்ணழகி
தனியறையில் தனக்குள்ளே
புழுக்கத்தை மறைத்து தத்தளிக்கும்
கருங்கூந்தல் பெண்ணழகி
என்னவளே உன்னிடத்தில்தான்
எத்தனையெத்தனை வண்ணங்கள்
சுந்தரியே, முந்திரியே,
சொக்கவைக்கும் விண்மதியே,
புன்னகை பூச்சூடி எப்போதும் வாழ்ந்திடடி
என்வாழ்வில் நீ வந்ததனால்
என்னெண்ணங்களும் வண்னமயமானதடி
எப்படி நான் நன்றி சொல்வேன்
இனிய காதலை பொழிவதன்றி..!
No comments:
Post a Comment