Wednesday 22 October 2014

யார் வென்றது

உன்னிரு விழிகளின்
ஒளிக்கூட்டிலெனை சிறை வைக்கிறாய்.
உல்லாச பிழம்புகளின் உச்சாடனத்தில்
என் விழியம்புகளை செயலறுக்கிறாய்.
தோற்றோடாமல் அடைபட்டவென் கரங்களை
பாசக்கயிற்றால் பிணைக்கிறாய்
தப்பியோடாமலிருக்க வென் கால்களில்
அன்புச்சங்கிலிகொண்டு பூட்டுகிறாய்.
உயிர்சுவாசம் செல்லும் நாசிகளில்
உன் மூச்சுக்காற்றை நிரப்பி யெனை
உன்மத்தனாக்கி
செயலற்ற கைதியாய்
வதம் செய்கிறாய்.
இதயப்பாசறையில்
சிம்மாசன மிட்டு அமர்ந்து
எனது ராஜ்ஜியமென
ஓங்காரம் செய்கிறாய்.
அடையாள மிழந்த வெனக்கு
உன்னையே ஒப்படைத்து
உயிர்த்தெழச் செய்கிறாய்.
இறுதியில்,
உனை வென்றது நானா?
எனை வென்றது நீயா?
நமை வென்றது நம் காதலா?

No comments:

Post a Comment