அக்குறுகலான
பாதையில்
வளர்ந்திருந்த
முட்செடிமேல்
உதிர்ந்த
மலரிதழ்களின்
காய்ந்த
வாசனை பரவியிருந்தது
சுகந்தமென்பதறியாது
கருத்தும்
பழுத்தும்
கூர்கொம்புகள்
நிறைந்தும்
விஷம்
தோய்ந்திருப்பதாயும் சொல்லப்பட்ட முட்செடி
கார்முகிலோ
வெண்பஞ்சுத் தூவலோ
வண்ணத் தோரண
மின்னலோ
தனக்கொரு
புன்னகையைத் தர
வாய்பில்லையென்றே
நினைத்திருந்தது
ஊர்ந்திழையும்
அரவமோ
பாய்ந்தோடும்
முயல்களோ
மதயானைக்
கூட்டமோ
ஆர்ப்பரிக்கும்
அரிமாவோ
தன்மேல்
பாதம் வைத்தால்
பின்னர்
தரைமேல்
வைப்பதரிதெனவே
தனித்துவம்
பெற்றிருந்தது
மலர்வாசம்
சூழ்ந்த
இளந்தென்றல்
காற்றில்
மகிழ்ந்தாடி
வரும்
வண்ணத்துப்
பூச்சிகள் மட்டும்
மேலமர்ந்து
தவழ்ந்து
மலர்ந்து
செல்வது
தன்னையுமவை
மலர்கூட்டதிலொன்றென
நினைப்பதனால்
இருக்கலாமெனவும்
உணர்ந்தேயிருந்தது
கட்டாரி
கொண்டு
வெட்டிக்களைகையிலும்
கண்ணீர்
துளிர்க்கும் விதமறியா
கல்நெஞ்சுக்காரனென
சுற்றியிருந்த
சகச் செடிகள்
சொல்வதைக்
கேட்டும்
கலக்கமோ
முறுவலோயின்று
மரணிக்கும்விதம்
அறிந்தேயிருந்தது
எனக்குமது
பாடம் கற்பிக்குமோவென
காத்திருக்கத்
தொடங்கியிருந்தேன்...!
No comments:
Post a Comment