Thursday 11 June 2015

காட்சிப்பொருள்

அழிந்து கொண்டிருக்கும்
அற்புதக்கலைகளிலொன்றை
உயிர் வாழ உதவும்
துரும்பென எண்ணி
ஒரு கையில் கோல் பிடித்து
மறு கையால் கால் பிடித்து
அந்தரத்தில் ஊஞ்சலாடி
நீள் வட்டத்தில்
ஒற்றைச் சக்கரத்தில் உருண்டோடி
நெருப்புடனும் விளையாடி
மிருகங்களுடன் உறவாடி
மனிதர்களுக்கு காட்சிப்பொருளாகி
பிறர் மகிழ கரணமடித்து
எத்தனை செய்தாலும்
எம்முளம் காணாது
குறைந்த உடுப்பை உற்று நோக்கி
புலரும் தேகத்தில்
புண்கண் பதித்து
மனதைக் காணா மனிதரைவிட
அன்பை பொழிந்தால்
அன்பு செய்யும்
மிருகங்களே மேலன்றோ..!

No comments:

Post a Comment