சாணம் தெளித்த முற்றத்தில்
வந்தவளின் முகஞ்சுளிப்பில்
அவளவஸ்தையை கண்டுகொண்டாரவர்
தலை தாழ்த்தி
விழியுயர்த்தி நோக்கியவர்
என்னவெனக் கேட்க
முதுகு பிடிப்பை
முக்கலோடு சொன்னாள்
மெழுகிய திண்ணையில் அமரச் செய்து
மண் சுவற்றை சுரண்டியெடுத்த
மண்ணுருண்டையை
முதுகில் மூன்றுமுறை
மந்திரமாகவேதோ முணுமுணுத்தவாறு
மேலிருந்து மீழாக உருட்டியவர்
சரியானது, போவெனச் சொன்னதும்
அம்மாஞ்சியாய் தலையாட்டிப் போனாள்
அத்தனையும் கண்கொட்டாமல்
பார்த்திருந்த பேரன்
என்ன மந்திரமது தாத்தாவென கேட்க
சரியாகணும் முருகாவெனும்
மந்திரத்தை ஓத
ஓமெனும் மந்திரத்தின்
உட்பொருளையன்று உண்ர்ந்தவனாய்
இன்றும் செபிக்கின்றான்
எச்சூழலிலும்,
நம்பிக்கைதானதன் சாராம்சமென அறிந்தும்..!
No comments:
Post a Comment